Sunday, February 10, 2008

தோழருக்காக ஒரு உதவி

ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.
மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ....ழ....ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.
அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.
மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர்மகன் பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.
தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.
'நானொரு பாப்பாத்தி' என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற...ஜனநாயக....முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
" மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல"
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் செப் 2003 இருந்து

No comments: