Sunday, February 10, 2008

நிலத்தைப் பழிக்கும் நெல்லுமிரட்டிகள்?

"கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்
கருத்துரிமை பறிபோகு" மென்று
முறுக்கிக் கொண்டு போன
கதாசிரிய நண்பனைக்
காணநேர்ந்தபோது
தயாரிப்பாளர் சொல்லச் சொல்ல
தயக்கமில்லாமல் தனது கதையை
நறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்.
..
"புரட்சி, போராட்டம் இதெல்லாம்
என் இளகிய இதயத்தில் - இயலாது
இயக்கத்தில் சேரமாட்டேன்" என
பழக்கத்தை முறித்துக் கொண்ட
பழைய நண்பனைப் பார்க்கப் போனால்
ஆட்டுக்கறி உரிப்பது போல
ஒரு பெண்ணின் அங்க அவயங்களை
பாட்டில் பச்சையாக உரித்துக் கொண்டிருந்தான்
" என்னடா இப்படி" என்றால்
சினிமாவில் சேர்ந்துவிட்டேன் என
சிரிக்கிறான் கோரமாக.
"இலக்கியவாதிகளுக்கே உரிய அடையாளம் கிடைப்பதில்லை....
கட்சிகள் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என
காட்டமாகப் பேசிய இலக்கியவாதியை தேடிப் போனால்
" ஓ அந்த ஆம்வே (AMMY) ஏஜெண்ட்டா" என
அடையாளம் காட்டிகிறார்கள் தெருவாசிகள்.
"எனக்கு இலக்கியம் பண்ணத் தெரியும்
அரசியல் பண்ணத் தெரியாது" என்று
இரட்டுற மொழிந்து
விலகிச் சென்ற நண்பனை விசாரித்தால்
இப்போது பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வீடாம்.
எப்படியெனக் கேட்டால்
கனிமொழியின் இலக்கியச் சந்திப்பால் வந்த கோட்டா
என்கிறார்கள் கூட இருப்பவர்கள்.
..
"வீரமிக்க தமிழ்மணம்
இப்போது ஈழத்திலிருக்கிறது" என்று
கவியரங்குகளில் கைதட்டல்களை எழுப்பும்
அண்ணணைத் தேடினேன்,
'வாடி வாடி நாட்டுக்கட்டை' க்கு அடுத்த வரிகளைத் தேடி
அவர் ஆத்துப் பக்கம் போயிருப்பதாய்த் தம்பிகள் சொன்னார்கள்.
மலம் உருட்டும் வண்டுகள் கூட
வெளிப்படையாய் இறங்குகின்றன
மனங்கரத் துடிக்கும் இலக்கியவாதிகளே
நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் ஜூலை 2003 இருந்து
************************************************
(குறிப்பு: நெல்லுமிரட்டி என்பது நெல்லுடன் சேர்ந்து வாழும் நெற்பயிரைப் போலவே தோற்றமளிக்கும் களை)

No comments: