Sunday, February 10, 2008

அந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்லையா?





வீட்டில் புரையேறும்போதும்
யாரோ நினைப்பதாய்
உறவு பாராட்டும் உள்ளங்களே
வெளியே சிலர் போராடும்போது
நீங்கள் உறவாக நினைத்ததுண்டா?
தனது நெல்லுக்கும் கரும்புக்கும்
நியாயா விலை கேட்கிறான் விவசாயி
அவனது தற்கொலைக்கான மருந்தையும்
அந்நியக் கம்பெனிகளிடம்
வாங்கச் சொல்லி
வர்த்தகச் சட்டம் போடுகிறது அரசு.
கடனும் வட்டியுமே
கண்ணிகைகள் ஆனதனால்
தூக்கம் தொலைந்து
கண்ணின் நிறம்மாறிக்
கருஞ்சிவப்பு ஆனாலும்
அந்தக் கண்களின் ஈரத்தையும்
கரும்பின் கால்களுக்குத் தந்து நிதம்
பச்சையம் மாறாமல் பார்த்துக்
கொள்வான்
கரும்பு விவசாயி.
சமைந்து விட்டதற்கான சமிக்ஞையை
தோகைத் தாவணி அசைவிற்காட்டும்
கருப்பங்கொலை.
கட்டிக் கொள்ள
கவர்மெண்டும் தயாரில்லை
கட்டுப்படியான விலைக்குத்
தரகர்களும் வருவதில்லை.
கணுக் கணுவாய்
காயும் இளமை கண்டு சகிக்காமல்
கோதிவிட்ட தன் கைகளாலேயே
கொள்ளி வைக்கிறான் விவசாயி
அந்த நெருப்பின் அவலம்
உங்கள்
நெஞ்சத்தைப் பற்றவில்லையா?
..பூ லாரி தூக்கிக் கோவிலுக்குப்
போகையிலும் "நீ வாயும் வயிறுமா இருக்குறவ.
இங்ககொடு"
எனத் தான் வாங்கும் உள்ளங்களே.
..அதோ...தார்வாளியோடு
நடுரோட்டில் ஒருத்தி
அவளது கர்ப்பவெப்பத்தின்
காங்கல் தாங்காமல்
கருங்கல் ஜல்லியும் இடிந்து நொறுங்கும்
நீங்கள் ?
..எத்தனைச் சாலைகள் போட்டாலும்
ஊர்போய்ச் சேருவதில்லை
ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை.
கால் இடித்தாலும்
"கட்டைல போவ!
ரோடு போட்டுவச்சானுவ"
என்று பொதுவாக திட்டும் உங்களுக்கு
.."சாலைப் பணியாளர்களை நிரந்தரமாக்கு
தனியாராக்காதே" என்று
கொதிக்கும் தாரிலிருந்து
ஒலிக்கும் அவர்களது குரல்
உறவில்லையா?
..
ஐஸ் வச்ச மீனு நல்லாயிருக்காது
அப்படியே வேணுமென்று
ஆசைப்படுவோரே.
உப்புக்காற்றை உள்ளே வாங்கி
வெறும் பீடி நெருப்ப்பில் இரவைத் தீய்த்து
ஆழ்கடலெங்கும் அலசினாலும்,
அந்நியக்கப்பல் மேய்ந்து விடுவதால்
வலைக்குள் வறுமையே அகப்படும்
நித்தம்
..ஐசில் வைத்துப் பாதுகாக்க
அவர்களுக்கு வசதியில்லை
அதோ அப்படியே கிடக்கிறது
மீனவன் பிணம்
ருசித்துத் தின்ற சொந்தங்களே
என்ன? இதையும்
ரசித்துப் பார்க்க இயலுமா?
..மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன் என்பதை
மனப்பாடப் பகுதியில் வைத்து
மரியாதை செய்யும் சுற்றத்தீரே!
இந்த மாகணத்துக்கே போர்வை தந்த
ஈரோடு, பவானி நெசவாளர்கள்
இப்போது அரசின்
இறக்குமதிக் கொள்கைக்கெதிராய்
வீதியிலே!
..என்ன மயிருக்குடா போராட்டம் என
மிரட்டும் தடைச் சட்டம்.
..உயிரிழை உருகும்
அந்த நெசவாளர்களுக்கும்
உங்கள் மானத்திற்கும்
உறவில்லையா, சொல்லுங்கள்?
..மின்சாரக் கட்டுமானப் பணியின் போது
காக்கை குருவிகள் போல
கம்பிகளில் அடிபட்டுச் செத்துப்போன
தொழிலாளர்களின் சாவை விடக்
கொடூரமானது
அதை
அந்நியன் ஆக்கிரமிக்குபோது
அசையாமல்
பார்த்துக் கொண்டிருப்பவர்களின்
வாழ்வு.
..
உங்கள் இருப்புப் பாதையின்
தாதுப் பொருள்
அதற்காக இறந்த தொழிலாளர்களின்
தண்டுவடம் என்றால் தப்பில்லை.
தேசத்தின் மிகப்பெரிய துயரம்
ஒருவேளை சோறில்லை என்பதல்ல
இந்தத் தேசம் நமதல்ல என்பதுதான்.
யார் தடுத்தாலும்
யார் தடை செய்தாலும் அதோ அவர்க்ள்
தொழிலாளர்கள், விவசயிகள்
மாணவர்கள்
வீதிக்கு வருகிறார்கள்.
..
ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்க்கும் விசித்திரங்களே
உங்களுக்கு வேறு வேலை இருக்கிறதா?
போங்கள்
..
வீட்டு வாசலில் உங்களுக்கான
அடிமை வரி காத்திருக்கிறது
" அய்யோ எங்களுக்குமா? " என்று
அலறும்போது
நீங்களும் தடை செய்யப்படுவீர்கள் !

No comments: